Skip to main content

காஞ்சி பெரியவா

*எழுத்தாளர் சுஜாதா காஞ்சி பெரியவரைப் பற்றி கூறியது*

பெண்ணுக்கு குங்குமம், ஆணுக்கு விபூதி, திருமண் என்கிற அடையாளங்களை ஒரு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆக்கி அளித்திருக்கிற அந்த ஆன்மிக நெறிப்பாட்டின் பின்னாலே, ஒரு பெரும் பொருள் இருக்கிறது.

இதற்கான விடையை நான் எவ்வளவோ பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் நெற்றியில் தரிக்கும் விபூதிக்கோ, இல்லை திருமண்ணுக்கோ என் நெஞ்சம் நிரம்பும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னதில்லை.

கண்ணதாசன் மட்டும் தன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஓரளவு சொன்னார்.

ஒவ்வொரு முறை விபூதியை தரிக்கும் போதும், ஒவ்வொரு இந்துவும், இந்த உடம்பும் ஒருநாள் ‘இந்த விபூதிச் சாம்பல் போல் ஆகப் போகிறது’ என்பதை உணர்ந்து கொள்கிறான். திருமண்ணோ இந்த உடம்பை மண் தின்னப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது. எனவே, ‘நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கு ஒதுக்கி அடக்கத்துடனும் ஆரவாரம் இல்லாமலும் வாழ வேண்டும்’ என்று விபூதி, திருமண்ணுக்கு அவர் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்தது.

பெரியவரோ, இம்மட்டில் வெகு ஆழமான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை நான் அறிய நேர்ந்தபோது, என் நெற்றித் திருமண்ணை ஒரு சார்புக்குறியாக மட்டும் நான் கருதவில்லை. நம் சான்றோர்களின் ஆழமான பேரறிவை எண்ணி வியந்து போனேன்.

‘விறகினை அக்னி எரித்து சாம்பலாக்குகிறது. இறுதியில் அந்த சாம்பலே பஸ்மமாக மிஞ்சுகிறது. அதேபோல ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து பஸ்மமாக்குகிறது’ என்கிறான் கண்ணன் கீதையில்…

கண்ணனின் கருத்துப்படி பார்த்தால், ஞானத்தின் தோற்றம்தான் பஸ்மம்; அதாவது விபூதி! இதைச் சுட்டிக்காட்டி தன் கருத்தைக் கூற முன் வரும் பெரியவர், வெகு அழகாக அதற்காக அஸ்திவாரமிடுகிறார்.

‘பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போவிடுகின்றன. நாம் சாயம் வெளுத்துப் போய் விட்டது என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். என்றால், மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் – வடிவம் கொடுத்தால் அது விபூதி. பொய்யானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியை சார்ந்து நிற்கிறது.

ஆக, விபூதி நாம் யார் என்பதையும், நம் முடிவு எப்படிப்பட்டது என்பதையும் முதலிலேயே சொல்லி விடுகிறது’ என்கிறார்.

அப்படியே திருமண்ணுக்கும் விளக்கம் தருகிறார். வைஷ்ணவர்கள் துளசிச் செடியின் அடி மண்ணைத்தான் திருமண் என்று இட்டுக்கொள்வார்கள். அதை உடம்பின் பன்னிரெண்டு இடங்களில் இட்டுக்கொள்வார்கள். அப்படி இட்டுக் கொள்ளும்போது, விஷ்ணுவின் நாமங்களை (பெயரை) _கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர_ என்று சொல்லிச் சொல்லி இட்டுக்கொள்வார்கள்.

இப்படி நாமங்களைச் சொல்லி இட்டுக்கொண்டது தான் பின்னாளில், ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டது’ என்கிறார்.

என்ன ஒரு நேர்த்தியான வியாக்யானம்! பெரியவரின் இந்த கருத்தை தெய்வத்தின் குரல் வாயிலாக அறிந்த பிறகு விபூதி, திருமண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவர் சொன்ன ‘சாயம் வெளுத்து விட்டது’ உதாரணமும், நாமம் சொல்லிப் போட்டது ‘நாமம் போடுவது’ என்றாகிவிட்டதும் நினைவுக்கு வரும்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...