Skip to main content

வாமன அவதாரம்

பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் பலி என்ற அசுரன் தாக்கப்பட்டான்.

மற்ற அசுரர்கள் அவனை உயிர் பிழைக்கச் செய்தார்கள். அசுர வம்சத்து முனிவர்களும், அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியரும் அவனுக்குப் பழைய தேக பலத்தையும், சக்தியையும் அளித்தார்கள்.

அவனைப் பெரிய யாகம் ஒன்று செய்ய வைத்தார்கள். அந்த யாகத்திலிருந்து இரதம் ஒன்று வெளியே வர, அதன் மீதேறித் தேவ லோகம் சென்ற பலி, இந்திரனை விரட்டியடித்து தேவலோகத்தை கைப்பற்றினான். மகாபலி என்ற பெயருடன் சக்கரவர்த்தி ஆகினான்.

மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆட்சி மூன்று லோகங்களிலும் பரவியது. தேவர்கள் தேவலோகத்தைவிட்டு ஓடி மறைந்தார்கள்.

இதை அறிந்த தேவமாத அதிதி வேதனையுற்று கணவர் காசிபரிடம் முறையிட, அவர், விஷ்ணுவை நினைத்து விரதமிருக்கும்படி கூறினார். அவளும் பன்னிரண்டு நாட்கள் கடுமையான விரதமிருந்தாள்.

மகாவிஷ்ணு காட்சியளித்து, " தேவமாதாவே, மகாபலிச் சக்கரவர்த்தி பிராமணர்கள் செய்த யாகத்தினால் வலிமையடைந்திருக்கிறான். 
அதனால், அவனிடமிருந்து தேவலோகத்தை மீட்க, உனக்குப் புத்திரனாக நானே அவதரிப்பேன்." என்று அருளினார். அதன் படியே, அதிதியின் கருவில், வாமனமூர்த்தியாக அவதரித்தார், மகாவிஷ்ணு.

வாமனமூர்த்தி தம் குள்ளமான உடலுடன் மகாபலிச் சக்கரவர்த்தியின் அசுவமேத யாக சாலைககுச் சென்றார். மகாபலி அவரை வரவேற்று, உபசரித்து, உட்காரவைத்து அவருடைய பாதங்களைக் கழுவினான்.

கழுவிய நீரைத் தன தலைமேல் தெளித்துக் கொண்டான்.

பின் அவரிடம், தன்னை நாடி வந்த நோக்கம் என்ன என்று கேட்டான். எதுவாக இருந்தாலும் தருகிறேன் என்று வாக்குறுதியளித்தான்.

"மகாபலியே, கேட்பது எதுவாக இருந்தாலும் கொடுப்பதாக வாக்களித்து விட்டாய். எனக்கு வேண்டியது, என் கால்களால் அளந்த மூன்று அடி மண்தான். அதைக்கொடு " என்று கேட்டார்.

அதைக்கேட்ட மகாபலி மகிழ்ச்சியுடன், " மூன்று லோகங்களையோ, ஓர் இராஜ்யத்தையோ கேட்காமல், மூன்றடி நிலம் கேட்கிறீர்கள். அப்படியே தருகிறேன் " என்று கூறினான்.

அச் சமயத்தில் சுக்கிராச்சாரியார் குறுக்கிட்டு, " குள்ளமான உருவத்தில் வந்திருப்பது உன் குலவிரோதி மகாவிஷ்ணுதான் "என்று கூற, மகாபலி பதிலாக," என் குலவிரோதியானாலும், நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் " என்று கூறிவிட்டுத் தன மனைவி கொண்டுவந்த நீர் நிரம்பிய கெண்டியிலிருந்து தண்ணீரை ஊற்றி தாரை வார்க்க முயன்றார்.

உடனே சுக்கிராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, தண்ணீர் வெளியே வராமல் கெண்டியின் துவாரத்தை அடைத்து நின்றார்.

இதையறிந்த வாமனர், தன கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் துவாரத்தைக் குத்த, வண்டு ஒரு கண்ணை இழந்தது.

இதனால் சுக்கிராச்சாரியார் ஒற்றைக்கண் உடையவர் ஆனார். மகாபலி, கெண்டியிலிருந்து நீரைத் தாரை வார்த்துத் தானம் கொடுத்தவுடன், வாமனரின் உருவம் வளர்ந்தது, மிகவும் வளர்ந்து பிரம்மாண்டமானது. மகாபலி அவரை அண்ணாந்து பார்த்தான்.

வாமனர் வானத்தை ஓர் அடியாலும், நிலத்தை மறு அடியாலும் அளந்தார். பின், " ஓர் அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து விட்டேன்.மூன்றாவது அடியை எங்கே வைப்பது? " என்று கேட்டார்.

மகாபலி சற்றும் தயங்காமல், " ஸ்ரீ விஷ்ணுவே, தங்கள் மூன்றாவது அடியை என் தலைமேல் வையுங்கள் " என்று கூறித் தலை சாய்ந்து, வணங்கி நின்றார்.

மகாவிஷ்ணு தமது ஒரு பாதத்தை அவன் தலைமீது வைத்து அழுத்த, மகாபலியும், அவனைச் சேர்ந்த அசுரர்களும் பாதாள லோகத்தை அடைந்தார்கள்.

பிரம்மனும், பிரகலாதனும், மகாபலிககுத் துன்பம் நேராதவாறு காக்கும்படி மகா விஷ்ணுவை வேண்ட, "வரப்போகும் சாவர்ணி மனுயுகத்தில் மகாபலி இந்திரபதவியை அடைவான். அதுவரை, அவனை நானே காத்து வருவேன் " என்று கூறி, அனைவர்க்கும் அருள் புரிந்தார்...

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...