Skip to main content

ஸ்ரீ ரங்கனின் திருவடிகளில் சரணம்

ஊருக்குப் போவதென்றால், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில், மேல் வீட்டில் என எல்லோரிடமும் சொல்கிறீர்களே, உங்கள் இல்லத்துப் பெருமாளிடம் சொன்னீர்களா?”

    ( ஸ்ரீ பூவராகாச்சார்யார் ஸ்வாமி, தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், நியமங்கள் குறித்து ஒரு சமயம் தனது உபந்யாசத்தில் கூறினார்).

ஸ்ரீரங்கத்தில் ஓர் அரையர் ஸ்வாமி இருந்தார். தினமும் பெருமாள் முன்பு பிரபந்தம் சேவிப்பதே அவரது கைங்கர்யம். நீண்ட நாட்களாக அவருக்கு திருமலையப்பனை சேவித்து வர ஆசை. ஆனால், அதைப் பெருமாளிடம் கேட்க தயக்கம்.

ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பெருமாளிடம் தனது ஆசையைத் தெரிவித்தார்.
பெருமாள் சற்று நேரம் யோசனை செய்தார்.
‘நான் இங்கிருக்கும்போது இவன் எதற்கு அங்கே போக ஆசைப்படுகிறான்?’ என்று நினைத்தவாறே,
‘சரி, உன் விருப்பப்படி போய் வா. அதற்கு முன், ‘அமலனாதிபிரான்’ சேவித்து விட்டுப் போ’என்றார்.

அரையரும், ‘அப்படியே ஆகட்டும், அடியேன்’ என்று சொல்லி, அமலனாதிபிரான் சேவிக்க ஆரம்பித்தார்.
(திருப்பாணாழ்வாரின் பிரபந்தம் இது.)
‘அமலனாதிபிரான் அடியார்க்கு என்னைஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்…’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

முதல் பாசுரம், இரண்டாம் பாசுரம் முடிந்து, மூன்றாம் பாசுரம் சொல்ல ஆரம்பித்தார்.
முதல் முறை சொன்னார். ஆனால், இதை இரண்டு முறை சொல்வது மரபு. ஆக, இரண்டாவது முறையாக சொன்னார்.
‘மந்திபாய்வட வேங்கட மாமலை வானவர்கள்சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவினணையான்
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்திமேலதன்றோ அடியேன் உள்ளத் தின்னுயிரே.’

இரண்டு முறை சொல்லி முடித்ததும் பெருமாள், ‘எங்கே மறுபடியும் சேவியும்’ என்றார்.
‘மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றானரங்கத் தரவினணையான்…’
‘மறுபடி சேவியும்’ பாதி பாசுரத்திலேயே பெருமாளின் ஆக்ஞை பிறந்தது.
இப்போது, அரையருக்குப் பெருமாள் சொல்ல வந்தது புரிந்தது. ‘அடியேன் எங்கேயும் போகவில்லை’என்று சொல்லிவிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

வேங்கடமலையில் இருப்பதும் இந்த அரங்கத்து அரவின் அணையான் தானே?
இங்கே இருப்பவரை, மெனக்கெட்டு அங்கே போய் ஏன் சேவிக்க வேண்டும்? என்று பெருமாள் நினைத்தாராம்.
அரையர்போக விரும்பியும் பெருமாள் விரும்பவில்லை.
அதனால், எங்கே போவதானாலும் நீங்களும் முதலில் உங்கள் இல்லத்துப் திருவாராதன பெருமாளிடம் சொல்லி உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள்.
அவன் விருப்பப்படவில்லை என்றால் நாம் எங்கேயும் போக முடியாது!”

ஸ்ரீ ரங்கனின் திருவடிகளில் சரணம்....

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...