Skip to main content

சித்தர் முத்து வடுகநாதர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோயில் உள்ளது. ‘வாத்தியார் கோயில்’ என்ற பெயரிலும் இந்த கோயில் அழைக்கப்படுகிறது. சிங்கம்புணரி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் விநாயகர் மற்றும் கருப்பணசாமி சிலைகள் உள்ளன. விழா காலங்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்த கோயில் வளாகத்தில் கலையரங்கம் ஒன்றும் உள்ளது.

*தல வரலாறு:*

 செம்பிநாடு முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் பெண் வழி வாரிசு பூவலத்தேவன்குமராயி தம்பதிக்கு 1787ல் முத்துவடுகநாதர் பிறந்தார். பூவலத்தேவன் திடீரென இறந்ததையடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற எதிரிகள், அவரது வாரிசான முத்து வடுகநாதருக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றனர்.



இதனை அறிந்த குமராயி முத்து வடுகநாதருடன் நாட்டை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் குடியேறினார். பின்னர் மேலூர் அருகே உள்ள பட்டூர் கிராமத்தில் குடியேறியதால் பட்டூர் வாத்தியார் என்ற பெயரிலும் முத்துவடுகநாதர் அழைக்கப்பட்டார். அப்போது அருகில் உள்ள சிங்கம்புணரியில் ஒரு கொள்ளை கும்பல் மாந்திரீக வேலை செய்து அப்பகுதி மக்களிடம் கொள்ளையடித்தது.  மக்களின் வேண்டுகோளை ஏற்று சிங்கம்புணரி வந்த முத்துவடுகநாதர், அங்கு தனது சித்து வேலைகளால் கொள்ளையர்களை விரட்டியடித்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதி முழுவதும் அவரது புகழ் பரவியதுடன், திரளான பக்தர்கள் கூட்டமும் உருவானது. தொடர்ந்து அவர் தன்னை நாடி வந்த பக்தர்களின் துன்பங்களை தீர்த்து வைத்தார்.

96 ஆண்டுகள் வாழ்ந்த முத்து வடுகநாதர் 1883ல் ரோகிணி நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். அவருக்கு வணிகர் சங்கம் சார்பில் சிங்கம்புணரி வேங்கைப்பட்டியில் சிறிய பீடம் அமைத்து, அதில் அவரது சிலை நிறுவப்பட்டது. பின்னர் 1993ல் இந்த கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்கு  பவுர்ணமி தினத்தன்று இரவிலும், அமாவாசை தினத்தன்று பகலிலும் சிறப்பு அபிேஷகங்கள் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன சித்ரா பவுர்ணமி அன்று  வணிகர் சங்கம் சார்பில் பிரமாண்டமான பால்குட விழா நடக்கிறது.



ஊர் எல்லையில் உள்ள சீரணி அரங்கிலிருந்து கிளம்பும் பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைவர். அன்றிரவில் சித்தர் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடி  18ம் பெருக்கு தினத்தன்று  10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும். சித்தரின் ஆசி பெறுவதற்காக இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

சித்தர் ஜீவ சமாதியான ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் முத்து வடுகநாதர் பக்தர் உருவில் வருவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அன்று கோயில் பூசாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

விஷக்கடியால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் இங்கு சித்தரை வழிபட்டு மனமுருகி திருநீறு பூசி வேண்டினால் நோய் குணமடைவதாக கூறப்படுகிறது. மேலும் இங்கு குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்றும், மனச் சங்கடங்கள் அனைத்தையும் முத்து வடுகநாதர் தீர்த்து வைப்பார் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...