Skip to main content

பரம்பொருள்

பரம்பொருளானவர் எங்கும், பல்வேறு பொருள்களில் பல்வேறு குணங்களின் மூலமாகத் தோன்றியிருப்பதால்தான் நமக்கு இன்பம் உண்டாகிறது.

அவைகள் யாவும் நம்மைச் சார்ந்தவையே என்கிற எண்ணம் உதிக்கிறது.

அந்த இன்பமான உணர்வு தோன்றக் காரணம் என்ன ?

அதற்கும் நமக்கும் ஏதோ தொடர்பிருப்பதே அந்த இன்ப உணர்வுக்குக் காரணம்.

குழந்தையாப் பார்த்த உடன் தாயுள்ளமும், தாயைப் பார்த்த உடன் குழந்தை உள்ளமும் துள்ளுவது எதனால் ?

ஏனெனில் அவர்களுக்கு தங்களுக்குள் உள்ள உறவு தெரியும்.

இதைப் போன்றே எல்லாப் பொருளிலும் பரம்பொருள் இருக்கிறான் என்பதை உணரவேண்டும்.

என்னிடம் இருக்கும் இறையாற்றலே எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று எண்ணி உணர்வதே இன்பமடையும் உபாயமாகும்.

எல்லா இடத்திலும் அன்புத் தொடர்பை அமைத்துக் கொண்டால்தான், எல்லையில்லாத பரம் பொருள் ஒவ்வொரு அணுக்களிலும், திவலைகளிலும் வியாபித்திருக்கிறது என்பதைக் காணமுடியும்.

அப்படிப்பட்ட காட்சியும், அக்காட்சியைக் காணும் சக்தியும் பெற்று விட்டால் வேறென்ன வேண்டும் ?

ஆனால் இதற்காக பொறிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டியது அவசியம்.

போக வாசனையை விலக்கி, அன்பின் புனித நோக்கு ஏற்பட்டு விடுமாயின் நமக்கு ஒவ்வொரு பொருளிலும் பரம்பொருளின் இருப்பு தெரியும்.

இப்படி எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மா ஒன்று திரண்டு கண்முன்னே வந்தால் என்னவாகும் ?

இந்த நிலை அர்ஜுனனுக்கு ஏற்பட்டதாகக் கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியே வெலவெலத்துப் போய்விடுவான்.

ஒரு மாவீரன் கதியே இப்படி என்றால் நமது நிலை ? சிறிய சகுணமான அழகிய உருவத்திடம் தோன்றும் அன்பும், என்னைச் சேர்ந்ததென்ற உணர்ச்சியும், இன்பமும் விஸ்வரூபத்தைக் காணும் போது ஏற்படுவதில்லை.

எனவே அர்ஜுனன் கிருஷ்ணா, எனக்கு உன் பழைய இனிய உருவத்தையே காட்டும் என்கிறான். ஆக, முக்காலங்களிலும், மூவிடங்களிலும் வியாபித்துள்ள இறைவனே இன்பமானவன்.

அதோ கண்ணெதிரே தெரியும் நட்சத்திரங்கள் எவ்வளவு அழகானவை. சாந்தமாக, அடக்கமாக, மின்மினிப் பூச்சி போலக் கண்களைச்சிமிட்டிக் கொண்டு, எங்கோ வெகு தொலைவில் இருந்தாலும் என்னுடன் பேசுவது போலல்லவா தோன்றுகிறது ?

அதே நட்சத்திரம் தன்னைக் குறுக்கிக் கொண்டு, தகதகவென எரியும் தீப்பந்தாகி நம் முன்னே வந்து நின்றால் என்னவாகும் ?

சாம்பலாகி விடுவோம். ஆக, பரம் பொருளின் எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில் எது எது எங்கெங்கு இருக்கிறதோ, அது அது அங்கங்கே இருப்பதே இன்பம். அதை மாற்றுவதோ, மாற்ற நினைப்பதோ கூடத் துன்பம்.

காலம் பற்றிய விஷயத்தில் கூட இது பொருந்தும். நமக்கு பழைய பிறவிகளைப்பற்றிய நினைவு இருப்பதில்லை. இந்தப் பிறவியிலேயே நிறைய விஷயங்களை மறந்து போகிறோம்.

அதைப் போல வருங்காலம் பற்றியும் எதுவும் தெரியாது. ஊகத்தின் அடிப்படையில்தான் சொல்வோமே தவிர, அதுவே நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதுதான் நல்லது.

ஒரு கெட்டவன் நல்லவனாகி நம் முன்னே வந்தால் கூட, நமக்கு அவன் கடந்த காலம் நினைவிருப்பதால், அவனிடம் நமக்கு மதிப்பு உண்டாவதில்லை. அவன் எவ்வளவுதான் தன்னை நல்லவன் என்று நிருபிக்க போராடினாலும், அவனது பழைய பாவங்களை நம்மால் மறக்க முடிவதில்லை.

அவன் இறந்து வேறு மனிதனாக வந்தால்தான் உண்டு. எனவே இந்தப் பழைய நினைவுகளினால் மனோ விகாரம் பெருகுகிறது. இப்பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிடும் போது எல்லாம் முடிந்து போகின்றன.

பாவ புண்ணியங்களை மறந்து போவதற்கு இறைவன் கண்ட யுக்தி அல்லது உபாயமே மரணம். இந்தப் பிறவியின் சிரமங்களையே பொறுக்க முடியாமலிருக்கையில், பழைய பிறவியின் குப்பைகளை ஏன் கிளறிக் கொண்டிருக்க வேண்டும் ?

நம் பிள்ளைப் பிராயத்தில் நடந்தவைகளை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். இந்த மறதி நமக்கு மிகவும் நல்லது. பொதுவாக மனிதன் தீமைகளை மட்டும் விட்டு விட்டு நல்ல விஷயங்களை நினைவில் கொள்வானாயின் மிகவும் நல்லது.

 ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. எனவே காலம் எல்லா வற்றையும் சல்லடையாகச் சலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மறதியின் பொருட்டே மனிதனுக்கு சாவு உண்டாகியிருக்கிறது.

இந்த உலகில் எல்லாமே நல்ல முறையில் அமைந்துள்ளது. காலமும், இடமும் சேர்ந்து உருவாகியிருக்கிற இவ்வுலகை ஒருமித்து சேர்த்து நாம் உருட்டத் தேவையில்லை. அதனதன் போக்கில் அதுஅது இயங்குவதே பேரின்பம்.

அதைப் போல அதிகப் பழக்கத்தில் இன்பமில்லை. சிலவற்றோடு நெருங்கியும், சிலவற்றோடு விலகியும் இருப்பதே இன்பம். ஆசிரியரிடம் பணிவாய் விலகி இருப்போம்.

தாயிடமோ மடியில் போய் அமர்ந்து கொள்வோம். புஷ்பத்தை கையில் எடுப்போம். தீயைக் கண்டு விலகி நிற்போம். எனவே அதனதனுக்குத் தக்கவாறு அதனதனிடம் நெருங்கியோ விலகியோ இருப்பது இன்பம்.

நட்சத்திரம் விஷயமும் அப்படித்தான் எது எது எங்கே இருக்கிறதோ அதை அதை அங்கேயே விடுவதுதான் இன்பம். அதை விடுத்து முரட்டுத்தனமான அதிக நெருக்கமும் பழக்கமும் கொண்டால் இடர் விளையும். காலங்கள் மூன்றும் நம் எதிரில் நில்லாமல் இருப்பதே நல்லது. எனவே உலகில் எவறிடமும், எதனிடமும் பற்றற்று நடுவு நிலையில் வாழ்ந்து வருவதே பேரின்பம்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...