Skip to main content

கண்ணா... கருமைநிற கண்ணா

ஒரு நாள்  பனி விழும் இரவு, பௌர்ணமி நேரம் #யமுனை நதி   தீரத்தில் #பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு #ருக்மணியுடன் இருக்கிறான்.

பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது,   பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா   தூங்கவேயில்லை.   ஏன் நித்திரை  கொள்ளவில்லை   என்று கேட்டாள் ருக்மணி.  யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த  பக்தி கொண்ட ராதிகா (பக்தை)  இருக்கிறாள். அவள்  தூங்கவில்லை;   அதனால்   நான் தூங்கவில்லை   என்றான் பரமாத்மா.

அவள் ஏன் தூங்கவில்லை   என்று கேட்டாள்   ருக்மணி பிராட்டி. அவள் நித்யம்   இரண்டு படி பாலைச்  சுண்டக் காய்ச்சி   பரிமள திரவியங்கள்   எல்லாம் போட்டு அந்தப்   பாலைப் பருகுவது வழக்கம்.   இன்றைக்கு   அவள் பால் பருகவில்லை.  பால் பருகாததால் அவள் தூங்கவில்லை.    அதனால் நான்  தூங்கவில்லை என்றான்.   அவள் தூங்காததால்    பரமாத்மாவின்  தூக்கத்திற்குத் தடை. அவள் தூக்கத்திற்குத் தடை பால் பருகாதது. பக்தை பால் சாப்பிட்டால்  இவனுக்கு தூக்கம் வந்துவிடும்   என்று எண்ணி    ருக்மணி பிராட்டி  கிடுகிடுவென்று   ஒரு பசுவைத் தானே கறந்தாள்.  பரிமள திரவியங்கள்   போட்டு பாலைக் காய்ச்சினாள்.  தானே படகைச்  செலுத்திக்கொண்டு
யமுனையின் அக்கரைக்குப் போனாள்.

ராதிகா என்ற  பக்தையின் குடிசைக் கதவைத் தட்டினாள்.   கதவைத் திறந்த ராதிகா,எதிரே #மஹாலக்ஷ்மி பாத்திரத்துடன் நிற்பதைப் பார்த்து ப்ரமித்துப் போனாள்.   கையில் பாலைக்  கொடுத்தவுடன், பாலைப் பருகினாள்.  பாத்திரத்தை    வாங்கிக் கொணடு   வந்துவிட்டாள் ருக்மணி.   ‘நித்திரை போவான்   போல யோகு செய்யும் பிரான்’ பரமாத்மா.   தலையோடு கால்  போர்த்திக்கொண்டு    படுத்திருந்தான். ருக்மணி    வருவதைப் பார்த்ததும்  கண்ணை மூடிக்கொண்டான்.

பரமாத்மா தூங்கிவிட்டான் என்று சந்தோஷப்பட்டு ருக்மணி,    அவன் #திருவடியைத்  தொட்டு வணங்க  வேண்டும் என்று   போர்வையை நீக்கி  திருவடியைப் பார்த்தாள்.   திருவடியில் பார்த்தால் ஒரே கொப்புளங்கள். பகவானை எழுப்பினாள் ருக்மணி. பிசுபிசுவென்று தூரல் போட்டுக் கொண்டிருக்கிறது. குளிர்காற்று வீசுகிறது.   காலையிலிருந்து    வெளியில் எங்கும்  போகவும் இல்லை.    இப்படி திருவடியில்    அக்னியில் கால் வைத்ததுபோல் கொப்புளித்து இருக்கே? எப்படி என்று கேட்டாள்.

ராதிகா பால் பருகினாள்   அல்லவா!அதனால்தான்!   என்றான் பரமாத்மா.   ராதிகா பால் பருகியதற்கும்,   கால் கொப்புளித்ததற்கும்   என்ன சம்பந்தம்? என்று கேட்டாள் ருக்மணி.   நீ சுடச் சுட கொண்டுபோய் கொடுத்தாய். உன்னைப்   பார்த்த அதிசயத்தில் அப்படியே பாலைப் பருகிவிட்டாள் அவள்.   அதனால் என் கால் கொப்புளித்துவிட்டது என்றான்.   இதைக் கேட்ட ருக்மணி சிரித்துவிட்டாள்.   சுடச்சுட பாலைப்   பருகினாள் என்றால்   அவள் நெஞ்சு அல்லவா கொப்புளித்துப்  போகவேண்டும்.  தங்கள் திருவடி  ஏன் கொப்புளித்தது?    என்று கேட்டாள்.  பகவான் சிரித்துக்   கொண்டே சொன்னான்.’  அவள் நெஞ்சில்   இருப்பது என்   திருவடிதானே!    பால் சுடச்சுட    என் திருவடியில்தானே  விழுந்தது! என்றான்.

மஹாலக்ஷ்மியான  ருக்மணி தாயார் நடுங்கிவிட்டாள்.  ருக்மணித் தாயாரான மஹாலக்ஷ்மிக்கே  தெரியாத பக்தி ராதிகாவின் #பக்தி.  அவள் நெஞ்சில் இருப்பது என் திருவடியே என்று சொன்னான்  என்றால் இது ‘மாமாயத்வம்’ இல்லாமல் வேறு என்ன!ருக்மிணியையே ப்ரமிக்க வைத்து பக்தர்களின் உயர்த்தியை எடுத்துக் காட்டினான். எப்படி வேண்டுமானாலும்  பேசுவான். எதையும் சாஸ்திரார்த்தமாக்குவான். தன் வாக்கை நிர்த்தாரணம் பண்ணக்கூடியவன்;  உத்தம பக்தியை வெளிக்காட்டக் கூடியவன், மாயவன்..!

#கண்ணா..!,
   #கருமைநிற_கண்ணா..!
       #மாய_கண்ணா..!

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...