Skip to main content

சரீர தத்துவங்களின் விபரங்கள்

ஞானேந்திரியங்கள் ஐந்து

1. சுரோத்திரம் (காது) :-

இது ஆகாசத்தின் அம்சமானபடியால், அதன் குணமான அனைத்து சப்தங்களையும் கேட்டுக்கொண்டிருக்கும்.

2. தொக்கு (தோல்) :-

இது வாயுவின் அம்சமானபடியால் அதன் குணங்களாகிய சீதளம் (குளிர்ச்சி), உஷ்ணம் (வெப்பம்), மிருதுவு (மெல்லிய) மற்றும் கடினம் என்னும் நான்குவிதமான ஸ்பரிசங்களை உணரும்.

3. சட்சு (கண்கள்) :-

இது அக்னியின் அம்சமானபடியால், அதன் குணங்களான வெண்மை, கருமை, சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் எல்லாம் கலந்த வர்ணம், மேலும் நீளம், குட்டை, பருமன், மெலிந்த என்னும் பத்து வித ரூபங்களைப் பார்க்கும்.

4. சிங்குவை (நாக்கு) :-

இது நீரின் அம்சமானபடியால் அதன் குணங்களாகிய உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்னும் அறுசுவைகளின் இரசத்தை அறியும்.

5. கிராணம் (மூக்கு) :-

இது மண்ணின் அம்சமானபடியால் அதன் குணமாகிய சுகந்த, துர் மணங்களை மாத்திரம் பகுத்து அறியும்.

இவ்வைந்து இந்திரியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷயத்தை அறிவதனால் இவைகள் ஞானேந்திரியங்கள் எனப்படும்.

கர்மேந்திரியங்கள் ஐந்து...

1. வாக்கு (வாய்) :-

இது ஆகாசத்தின் அம்சமானபடியால், அதன் குணமான சப்தத்தைக் கொண்டு பேசும்.

2. பாணி (கைகள்) :-

இவை வாயுவின் அம்சமாக இருப்பதினால் கொடுத்தல், வாங்கல், பிடித்தல், மற்றும் விடுதல் போன்ற காரியங்களைச் செய்யும்.

3. பாதம் (கால்கள்) :-

இவை அக்னியின் அம்சமாக இருப்பதினால் நடப்பது, உட்காருவது, நிற்பது, மற்றும் எழுந்திருப்பது போன்ற காரியங்களைச் செய்யும்.

4. பாயுரு (குதம்) :-

இது மண்ணின் அம்சமாக இருப்பதினால் மல, மூத்திரங்களை வெளியில் தள்ளச்செய்யும்.

5. உபஸ்தம் (மர்மஸ்தானம்) :-

இது நீரின் அம்சமாக இருப்பதினால் அப்போதைக்கு அப்போது மூத்திரம், சுக்கிலம் மற்றும் சோணிதம் விடுவித்துப்போக ஆனந்தம் அடைவிக்கும்.

இந்த ஐந்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரியத்தைச் செய்து கொண்டிருப்பதினால் இதற்கு கர்மேந்திரியங்கள் என்று அழைக்கப்படும்.

தன்மாத்திரைகள் ஐந்து...

1. சத்தம் :-

ஆகாசத்தின் தன்மாத்திரை, இது செவியின் உட்புறத்திலுள்ள மெல்லிய சவ்வின் வழியாக சப்தத்தைக் கேட்கும்.

2. ஸ்பரிசம் :-

வாயுவின் தன்மாத்திரை, இது தேகத்தினால் சர்வ வாயுக்களுடன் வியாபித்து இருப்பதினால் தொட்டுக்காட்டும் உணர்வை சரீரத்தின் வாயிலாக அறிவிக்கும்.

3. ரூபம் :-

அக்னியின் தன்மாத்திரை, இது கண்களில் அக்னி சம்பந்தப்பட்டிருப்பதால் பத்து வித ரூபங்களையும் காட்டிக்கொடுக்கும்.

4. ரசம் :-

நீரின் தன்மாத்திரை, இது நாவில் நீர் சம்பந்தம் இருப்பதினால், அந்த நாவின் மூலமாக அறுசுவைகளின் பேதங்களை அறிவிக்கும்.

5. கந்தம் :-

மண்ணின் தன்மாத்திரை, இது மூக்கில் சம்பந்தப்பட்டிருப்பதினால் அந்த மூக்கின் வழியாக நல்ல, துர் மணங்களை அறிவிக்கும்.

பிராணன்கள் ஐந்து....

1. பிராணவாயு :-

இது இருதயஸ்தானத்திலிருந்து மூக்கின் ரந்திரங்களின் வழியாக மேல் நோக்கி நடந்து பசி, தாகங்களை உண்டாக்கி உண்ட ஆகாரங்களை ஜீரணம் செய்விக்கும்.

2. அபானவாயு :-

இது குதத்தைப்பற்றி நின்று மல, மூத்திரங்களையும், சுக்கில, சுரோணிதத்தையும் வெளியில் தள்ளும் படி செய்யும்.

3. உதாணவாயு :-

இது கண்ட ஸ்தானத்திலிருந்து ஆகாரத்தை விழுங்கி, அந்த ஆகார ரசத்தை நாடிகளுக்கு வியாபிக்கச் செய்து சப்தத்தோடு கலந்து குரலோசை செய்விக்கும்.

இதுமட்டுமின்றி, தூங்கும் போது கண்கள், மூக்கு, வாய், செவிகள் மற்றும் சரீரத்தின் மேலிருக்கும் தோல் என்னும் ஐந்து இந்திரியங்களை அஞ்ஞானம் என்னும் இருளில் மூழ்கடித்து, பிறகு தூங்கி எழுந்தவுடன் அந்தந்த இந்திரியங்களைத் தம்தம் ஸ்தானத்தில் வந்து இருக்கும்படி செய்விக்கும்.

4. ஸமானவாயு :-

இது நாபி ஸ்தானத்தில் இருந்து உதானவாயுவினால் அனுப்பப்பட்ட ஆகார ரசத்தை நாடி நரம்புகளுக்கு சமமாக பங்கிட்டுத் தேகத்தை வளரச்செய்யும்.

5. வியானவாயு :-

இது சரீரத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்து ஸ்பரிசத்தைக் கிரகிக்கச் செய்யும். மேலும், உண்ட ஆகாரத்தை சக்கை வேறு, ரசம் வேறு என பிரித்துக் கொண்டிருக்கும்.

இந்த ஐந்து வாயுக்களும் தேகத்தில் இருப்பதினால் மட்டுமே ஒருவன் ஜீவித்து இருக்க முடியும்.

ஆதலால் இவைகளை பஞ்ச பிராணன்கள் என்றனர்.

இந்த பஞ்ச வாயுக்களுடன் தொடர்புடைய உப வாயுக்கள் ஐந்து உள்ளன. அவைகளையும் அறிந்து கொள்வது நல்லது.

6. நாகன் :-

இது கண்டத்திலிருந்து வாந்தியை உண்டு பண்ணும். மேலும், கண்களினால் எல்லாவற்றையும் பார்க்கச் செய்யும்.

7. கூர்மன் :-

இது கண்களின் இமைகளை திறக்கவும், மூடவும் செய்யும்.

8. கிருகரன் :-

இது மூக்கிலிருந்து குருகுருத்துத் தும்மலை உண்டாக்கும்.

9. தேவதத்தன் :-

இது மார்பிலிருந்து கபத்தை சேர்த்து நெட்டிக் கொட்டாவியை உண்டாக்கும்.

10. தனஞ்சயன் :-

இது கர்பத்திலிருக்கும் பிண்டத்தை வெளியில் தள்ளும்.

அதனின்று மரணமடைந்த சரீரத்தை வீங்கி வெடித்து நாற்றமடிக்கச் செய்யும்.

இந்த தனஞ்சயன் என்னும் வாயு, சரீரத்தை தகனம் செய்யும் வரை சரீரத்தை விட்டு வெளியேறாது.

இது போன்ற பத்து வாயுக்களும், பத்து நாடிகளில் திரிந்து கொண்டிருக்கும், இதுவன்றி பூஷா, அலம்புஸா என்ற நாடிகள் காதுவிடமிருந்து பற்பல சப்தங்களை கேட்கச் செய்யும்.

கந்தாரி, ஹஸ்திஜிஹ்வா :-

என்னும் நாடிகள் கண்களின் வாயிலாக அனைத்து விஷயங்களையும் தெரியச் செய்யும். இது இருதயத்திற்கு மேலே வியாபித்திருக்கின்றது.

சிநீவாலி, குஹூ :-

இந்த இரண்டு நாடிகளும் மல, மூத்திரங்களை விடச்செய்து கொண்டு அநாகதச் சக்கரம் முதல் மூலாதார சக்கரம் வரை வியாபித்து இருக்கும்.

ரக்தவியானன் :-

இந்த நாடியானது அநாகதம் முதல் ஸ்வாதிஷ்டானம் வரையிலும் வியாபித்து, அந்தரங்க ஸ்தானத்தில் குஹூ நாடியுடன் கலந்து சுக்கில, சுரோணிதங்களை ஏகமாய் வெளியில் தள்ளச் செய்யும்.

இந்த ஏழு நாடிகளும் இருதயத்தை ஆதாரமாகக் கொண்டு நான்கு நாடிகள் மேல் முகமாகவும், மூன்று நாடிகள் கீழ் முகமாகவும் வியாபித்திருக்கின்றன.

இட, பிங்கலை :-

இவ்விரண்டும் நெற்றிச் சக்கரம் முதல் மூலாதாரம் வரையிலும் வலமிடமாக வியாபித்து அதன் மத்தியில் ஸூஷும்னா நாடியை அநுசரித்துத் திரிகின்றன.

இவை புருவ மத்தியிலிருந்து கொண்டு வலது நாசி. இடது நாசிகளில் சேர்ந்து பிராண வாயுவை உள்ளும், வெளியுமாக நடத்திக்கொண்டிருக்கின்றது.

ஸுஷும்னா நாடி :-

இது பிரம்மரந்திரம் வரையில் வியாபித்து நாவில் சேர்ந்து ஓசைகளை உண்டாக்கும்.

அந்தக்கரணங்கள் நான்கு...

1. மனம் :-

இந்த மனம் வாயுவின் அம்சமானபடியால் தன் சொரூப குணமாகிய நினைப்பு மறப்பென்னும் சங்கல்ப விகல்பங்களையே செய்து கொண்டு, எதையாவது நினைத்துக்கொண்டும், மறந்துக் கொண்டும் வாயுவைப் போன்றே அலைந்து திரியும்.

இதற்கு அதி தேவதை - சந்திரன். இடம் - நாபி.

2. புத்தி :-

இது அக்னியின் அம்சம். விஷயங்களில் சுய ரூபத்தை நிச்சயிக்கும் வடிவ விருத்தியே புத்தியாகும். இந்த புத்தி எது நல்லது, எது கெட்டது என்பதை நிச்சயித்து அறியும்.

இதன் அதிதேவதை - பிரமன். இடம் - முகம்.

3. சித்தம் :-

இது நீரின் அம்சம். இது பஞ்சேந்திரியங்களுக்குச் சலனத்தை உண்டாக்கி அதன் வழியாக விஷயங்களை பற்றி இழுத்துச் செல்லும். நினைவுகளின் ஆழ்மனப் பதிவுகளே சித்தத்தில் தங்கி அவ்வப்பொழுது வெளிப்படும்.

4. அஹங்காரம் :-

இது மண்ணின் அம்சம். அழியக் கூடிய மாமிஸ பிண்டமான இந்த சரீரத்தையே “நான்” என்று நினைத்து அதன் மீது அபிமானம் வைத்து பாவ, புண்ணியங்களைச் செய்து கொண்டிருக்கும்.

இதற்கு அதிதேவதை – ருத்திரன். இடம் – இருதயம்.

இந்த நான்கும் சரீரத்தில் வியாபித்துக் கொண்டு ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களை அவ்வவ் விருத்திகளில் பிரவேசிக்கச் செய்கின்றன.

*- ஜீவபிரம்ம லயம்.*

ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தியே போற்றி...

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...