Skip to main content

எசையனூர் பாட்டி

காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.
எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.

“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.
“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.
“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம்; போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.

காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.

பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...