Skip to main content

மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம்

36 திருப்பாண்டிப் பதிகம்

*திருப்பெருந்துறையில் அருளியது*

இறைவனைப் பாண்டி நாட்டுத் தலைவனாக வைத்துப் பாடி அருளுதலின் திருப்பாண்டிப்பதிகம் எனப்பட்டது. இதனுள் இறைவன் குதிரை மேல் வந்து அருள் செய்தமை கூறப்படுகின்றது.

*சிவானந்த விளைவு*

அஃதாவது, சுகப்பேறு. இப்பேறு இறைவன் திருவிளையாட்டை எண்ணி மகிழ்வதால் உண்டாவதாம்.

*கட்டளைக்கலித்துறை*

*திருச்சிற்றம்பலம்*

*பாடல் 10*

கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால்

வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால்

ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே;

தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.

*பதப்பொருள் :*

கூற்றை வென்று - இயமனை வென்று, ஆங்கு - அவ்வாறே, ஐவர் கோக்களையும் வென்று இருந்து - ஐம்புலன்களாகிய அரசரையும் அடக்கிக்கொண்டு, பெருந்தேவியும் தானும் - பெரிய சத்தியும் தானுமாக, அழகாய் வீற்றிருந்தான் - அழகாய் எழுந்தருளியிருந்தானாகிய இறைவன், ஓர் மீனவன்பால் -ஒப்பற்ற பாண்டிய மன்னனுக்காக, ஏற்று வந்தார் உயிர் - எதிர்த்து வந்தவர்களது உயிரை, உண்ட - வாங்கின, திறல் - வலிமையுள்ள, ஒற்றைச்சேவகள் - ஓர் வீரனாயினான்; ஆகையால், தேற்ற மிலாதவர் - தெளிவில்லாதவர்கள், சேவடி - அவனது சிவந்த திருவடியை, சிக்கெனச் சேர்மின்கள் - உறுதியாகச் சென்று பற்றிக்கொள்ளுங்கள்.

*விளக்கம் :*

ஐவர் கோக்களை வென்றது, காமனை வென்றதைக் குறித்தது. பெருந்தேவியும் தானுமாக வீற்றிருந்தது, திருவாஞ்சியத்தில் அம்மையப்பராகச் சீர் பெற இருந்ததாம். 'சேவகன்' என்றதற்குப் பின், 'ஆயினான்' என்பது வருவித்துரைக்க நின்றது. காஞ்சியில் வாழ்ந்த சமண மன்னனால் அனுப்பபட்ட யானையை ஒற்றைச் சேவகனாக நின்று பாண்டியனுக்காக அழித்த வரலாறு ஒற்றைச் சேவகனாகியதாம். இதனைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.

"திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து

மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்

சேவக னாகித் திண்சிலை யேந்திப்

பாவகம் பலபல காட்டிய பரிசும்"

என்ற கீர்த்தித்திருவகவல் அடிகளையும் காண்க.

இதனால், இறைவனது திருவருளைத் தெளிதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...