Skip to main content

தேடி அலைந்து திரிந்து

*தேடி தேடி அலைந்து திரிந்து.!*

ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன அருமையான கதை....!

ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார்.

வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது.

அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)

கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.

இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான்.

அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான்.

இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான்.

சந்தோஷமாக வீடு திரும்பினான்.

மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது.

அந்த வழியாக ஒருவன் வந்தான்.

இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.

பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.

மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.

99 நோட்டுகள்தான்.

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....!

அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்....!

*???......??.....!!!...*

அந்த ஒற்றை பத்துரூபாயைத் தேடினான்....!

தேடினான்....!  தேடினான்....!

இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்.....!!

என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.

பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக சென்றான்...

990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்...

கருத்து :-

நம்மில் பலர் இப்படித்தான் கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைந்து உடலும் மனமும் சோர்ந்து அல்லலுறுகிறோம்..!

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...