Skip to main content

சந்தேகக் குறி

பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை பற்றியவையே.   பாகவதம் அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. பகவத் கீதை அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது.  கீதை அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது.

கீதையை  ஏதேனும் அரை அத்தியாயம் ஒரு நாள்  படித்தாலே போதும்,   துயரம்,  துன்பம், தீமைகள்  விலகும்.  ஒரு சின்ன கதையோடு  இன்றைய கட்டுரை முடியட்டும்.

ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும்  கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம்   கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். 

வழக்கம் போல் அன்று  கீதையைப்  பாராயணம் பண்ணும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்'' என்ற இடம் வந்தது.   திடீரென்று   இன்று அவனுக்கு ஒரு சந்தேகம்.

இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள்.  அவ்வளவு பேரையும்  கிருஷ்ணன் எப்படி நான்  ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே  ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து  நேரில்  சென்று போக்குவது என்பது முடிகிற காரியமா?

எல்லோரின் கஷ்டத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்?. அவர்களை  சோகத்திலிருந்து, துன்பத்திலிருந்து எவ்விதம்  விடுவிப்பான்?  உலகில் எங்கும் அங்கங்கே அவன் நியமிக்கும் வேறு யார் மூலமாகவோ ஒரு வேளை நிவர்த்திப்பானோ? நான் பாதுகாக்கிறேன் என்றால் அது தான் அர்த்தமா? 

திரும்பி திரும்பி படித்தும்  அவனுக்கு  இது  விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று புரிந்து கொள்ளவேண்டும்  என்று தீர்மானித்து  சிகப்பு வர்ணத்தில் ஒரு   x  அந்த  அந்த அத்தியாயத்தில் ஸ்லோகத்தின் மேல் குறி வைத்தான். புத்தகத்தை மூடினான்.  சொம்பை ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல  உஞ்ச விருத்திக்கு சென்றுவிட்டான்.

அந்த ஏழை பிராமணனின் போறாத காலமோ, துரதிர்ஷ்டமோ   அன்றைக்கு பார்த்து ஒருவீட்டிலும் யாரும்  அவனுக்கு தானியங்கள் பிக்ஷை  அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணம் ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

பிராமணன் வழக்கமான தெருக்களில் அலைந்துகொண்டிருந்த சமயம் யாரோ ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத்  தட்டினான்.  பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது. அழகான  அந்த சிறுவன்  தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வீட்டில் வைத்தான்.

யார் அப்பா நீ ? என்ன இதெல்லாம்?  அட்ரஸ் தப்பா  இங்கே வந்து விட்டாய் போல இருக்கிறது?

''இல்லேம்மா, நான் இங்கே  இருக்கிறவன்  தான். இது என் குருநாதர் வீடு.  அவர் எனக்கு கட்டளை இட்டதால் அவருக்கு  தேவைப்பட்ட  சாமான்கள் இதெல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.''

மூட்டை நிறைய , பருப்பு, மாவுகள், அரிசி, சமையல் சாமான்கள், எண்ணெய்கள், நெய்  எல்லாமே இருந்தது.  தாராளமாக  மூன்று மாதத்திற்கு அவர்கள்  ரெண்டு பேருக்கு சமையலுக்கு தேவையானவை.

''நான் இங்கே உன்னை பார்த்ததில்லையே அப்பா.  எங்களுக்கு இதெல்லாம் வேண்டாமப்பா. அவருக்கு தெரியாமல் இதை நான் ஏற்க மாட்டேன். என்னை கோபிப்பார்''

அம்மா ஒருவேளை உங்களுக்கு   நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது.  குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் நான் மூட்டையை சுமந்து  மெதுவாக நகர்கிறேன் என்று  என் மேல் இடது பக்கமும் வலது பக்கமும்  பலமாக  முதுகில் அடித்திருக்கிறார்.

என் முதுகில் பாருங்கள் தெரியும்.  குரு பத்னி அவன் அழகிய முதுகில் பார்த்தாள் .   X  என்று  சிவப்பாக  அவள் கணவன்   அடித்ததின்   அடையாளம்.   அவள் திகைத்தாள்.  ஏன்  என் கணவர் இவ்வாறு இந்த சிறுவனிடம்  அவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார். இப்படிப்பட்டவரா என் கணவர்?  பார்ப்பதற்கு சாது மாதிரி இருக்கிறாரே!  . 

''என் குழந்தை நீ இங்கே வாடா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து  முதுகைத் தடவி, தேங்காய் எண்ணெய் தடவி, அவனுக்கு  உணவளித்தாள்.   அவர் வரும் வரை ஓய்வெடு என்றதும் அவன் பூஜை அறையில் போய்  படுப்பதாக  சொல்லி உள்ளே சென்றான்.

ரொம்ப நேரம் கழித்து களைப்பாக  எங்கும்  அன்று உணவு பதார்த்தங்கள், தானியங்கள் பிக்ஷை எதுவும் கிடைக்காமல் பிராமணர்  விசனத்தோடும் வெறும் கையோடும்  வீடு திரும்பினார். 

அவர்  தலையைக் கண்டவுடன் முதல் கேள்வியாக அவரை  எதுவும் பேச விடாமல்  சரமாரியாக  அவள்  அந்த அழகிய சிறுவன்,  சிஷ்யனா,  அவர் எப்போது அவனிடம்   சாமான்கள் கேட்டு கொண்டு வர சொன்னார் . அவன்  சாமான்களை தூக்க முடியாமல்  தூக்கி வந்தது. அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் பிரம்பால்  குறுக்கும் நெடுக்குமாக   அவர்  அடித்த சிவந்த அடையாளம்  எல்லாம் சொல்லி ஏன் அவனை அடித்தீர்கள் என்று காரணம் கேட்டாள் .

பிராமணருக்கு தலை சுற்றியது.

''எனக்கு சிஷ்யனா?  நான் சாமான் கேட்டேனா?  அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் அடித்தேனா?  என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது எதுவுமே நடக்கவில்லையே. எனக்கு யாரும் சிஷ்யனே கிடையாதே. நான் சாமான் கேட்கவில்லையே, அடிக்கவில்லையே''.

''நீங்கள் அடித்தீர்கள் என்று முதுகை காட்டினானே   X  என்று சிவப்பாக அடையாளம் இருந்ததே. சின்ன குழந்தை அவன் பொய் சொல்லவில்லை. நான் முதுகில் தேங்காய் எண்ணெய் தடவினேன். என்  கண்களில் நீர் பெருகியதே. ''

 ''இல்லை என்  கிருஷ்ணன்  சாட்சியாக எனக்கு அவனைத் தெரியவே தெரியாது, நான் அடிக்கவில்லை'' என்கிறார்.

''இதோ பூஜை அறையில் தான் இருக்கிறான் போய் பாருங்கள் '.  ஓடினார்.  வீடு முழுதும் தேடினார்.  அவனைக் காணோம்.

பிராமணருக்கு   புரிந்துவிட்டது. வந்தது  கிருஷ்ணன் தான்.  வீட்டில் நிறைய  சாமான்கள் வசதியாக நிறைந்திருந்ததே. அவர் வறுமை நீங்கியதே.  இது கிருஷ்ணன் லீலை. அவன் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து  மறுபடியும்  பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார்.  காலையில்  அவர் சந்தேகத்தோடு  போட்ட X  குறியைக் காணோம். யார் அழித்தது? 

''கிருஷ்ணா,   கோடானு கோடி மக்களின் துயர், சோகம் தீர நான் அருகிலே  இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று சந்தேகப்பட்டேனே.  என் வறுமைத் துயர் தீர்க்க நீ என் வீட்டிற்குள்  வந்தாய், வறுமையை போக்க  உணவளிக்க  மளிகை சாமான்களை நிரப்பினாய். உன் காருண்யம் புரிந்தது. உன்னால் முடியும் என்று புரிய   வைத்தாய்.

அதற்கு  அடையாளமாக நான் போட்ட சந்தேக குறியை முதுகில் தாங்கி  என் மனைவிக்கு தரிசனம் தந்தாய். அவள் செய்த  புண்யம், அதிர்ஷ்டம் கூட  செய்யாத பாவி நான் உன்னை சந்தேகப்பட்டேன்''. 

ஆம்  கீதையும் கண்ணனும் ஒன்றே.  கீதையை இது எப்படி என்று சந்தேகக்கப்பட்டு  அழுத்தி X  கோடு போட்டேன்,  கீதை நீ என்று அறியாத மூடன், அதை உன் மேல் சந்தேகப்பட்டதாக காட்டி முதுகில் வடுவோடு , காயத்தோடு என் மனைவிக்கு காட்டி எனக்கு கண் திறந்தாய். கிருஷ்ணா  என்னை மன்னித்துவிடு''.

எவன் அவனவனுக்கு நியமிக்கப்பட்ட தர்மங்களை, சாஸ்திரங்களை பின்பற்றாமல்  மிருக வாழ்க்கை நடத்துகிறானோ, அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்காது.

இன்று முழுதும் உஞ்சவிருத்தியில் ஒரு மணி அரிசி கூட எனக்கு  கிடைக்கவில்லையே. இது நிதர்சனமான உண்மை இல்லையா?

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்  !

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...